ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசியல் சட்டத்தை மீறுகிறது பாஜக- சஞ்சய் ராவத்
மாநில அரசின் அமைச்சரவையில் இருந்து ஒருவரை நீக்குவது அம்மாநில முதலமைச்சரின் உரிமை என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு ஆளுநர் அலுவலகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக சாடி வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை குறித்து உத்தவ் தாக்கரே அணித் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில். இது தவறு. அரசில் இருந்து ஒருவரை நீக்குவது முதலமைச்சரின் உரிமை. மகாராஷ்டிராவிலும், நவாப் மாலிக் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன, ஆனால் அவரது ராஜினாமாவை அரசாங்கம் எடுக்கவில்லை. ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம், பகத்சிங் கோஷ்யாரியை விட ஒரு படி மேலே இருப்பது போல் தெரிகிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசியல் சட்டத்தை மீறுகிறது. இவ்வாறு கூறினார்.