"ஏன் பள்ளிகளை திறந்தீர்கள்; இன்னும் 1 நாள் தான் கெடு" - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!
இந்திய தலைநகர் சில ஆண்டுகளாகவே காற்று மாசால் திணறி வருகிறது. தற்போது பனிக்காலம் வேறு நெருங்கிவருவதால், பனிக்காற்றோடு சேர்ந்து மாசு துகள்கள் கலந்து புகை மண்டலமாகக் காட்சியளிக்கின்றன. இதனால் டெல்லி அபாய கட்டத்தில் இருக்கிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் டெல்லியின் சுற்றுச்சூழல் இந்த வாரம் நிலைமை மேலும் மோசமடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் உத்தரவிட, முழு ஊரடங்கை அமல்படுத்தியது டெல்லி அரசு. அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல கட்டுமான தொழில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இதன் விளைவாக சில நாட்களிலேயே காற்று மாசு பெருமளவு குறைந்தது. இதையடுத்து நவம்பர் 29ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டது. இரண்டு நாட்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழலில் காற்று மாசு தொடர்பான வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரமணா, ஊழியர்களே வீட்டிலிருந்து வேலை செய்யும்போது எதற்காக பள்ளிகளைத் திறந்தீர்கள் என கேள்வியெழுப்பினார்.
மேலும், "நாங்கள் நினைத்தது போல காற்று மாசை குறைக்க டெல்லி அரசோ, மத்திய அரசோ ஒரு துரும்பை கூட எடுத்துப் போடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எங்களின் நேரத்தைத் தான் நீங்கள் வீணடிக்கிறீர்கள். இன்னும் 24 மணி நேரம் தான் அவகாசம். அதற்குள் தொழிற்சாலை மற்றும் வாகனங்களால் ஏற்படும் மாசுவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். உங்களால் முடியவில்லை என்றால் காற்று மாசை கட்டுப்படுத்த நாங்களே அதிகாரிகளை நியமிப்போம்” என்றார்.