காஷ்மீரில் 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

 
court

காஷ்மீரில் 2024ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடு என்று நாங்கள் கருதுகிறோம். 370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இருந்தது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும் போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது. இந்தியாவுடன் இணையும் போது காஷ்மீருக்கு இறையாண்மை இல்லை. காஷ்மீர் அரசியல் சாசனத்தில் இறையாண்மை இல்லை. இந்தியாவுடன் இணைந்த போது இந்தியாவிடமே காஷ்மீர் இறையாண்மை இருந்தது. மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கேள்விக்குரியது இல்லை. காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை. எனவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.  

supreme court

இந்த நிலையில், காஷ்மீரில் 2024ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லடாக்கை யூனியன் பிரதேசமாக்கியது செல்லும் எனவும், மாநிலத்தை இரண்டாக பிரித்த விவகாரத்திற்குள் செல்ல தேவையில்லை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.