"ஏழை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது அரசின் கடமை" - சுப்ரீம் கோர்ட்!
இந்தியளவில் ஏதாவது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினால், அடப்பாவிங்களா இப்ப தான் இதையே அறிவிக்கிறீங்களா என்ற ரீதியிலேயே தமிழ்நாட்டு மக்கள் கேட்பார்கள். ஏனென்றால் அத்திட்டத்தை பல வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தி வெற்றிக்கரமாக செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு. இந்தியாவின் முன்னத்தி ஏர் தமிழ்நாடு என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரிவினரின் நலனைக் கருத்தில் கொண்டும் வகுக்கப்படும் திட்டங்கள் பின்னாளில் இந்தியளவில் மத்திய அரசால் தோற்றுவிக்கப்படும். சமீபத்திய உதாரணம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி.
இதனை எப்போதோ செய்துமுடித்துவிட்டது தமிழ்நாடு. போதுமான அளவுக்கு அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இதுபோக புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டம் செயல்வடிவம் பெற உள்ளது. இச்சூழலில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் கருத்து தமிழ்நாட்டின் சிறப்புக்கு மேலும் ஒரு வைரக்கல்லாக அமைந்துள்ளது. ஏழை மாணவ, மாணவியருக்கு இலவசமாக லேப்டாப் அல்லது தேவையான டிஜிட்டல் கருவிகளை வழங்குவது அரசின் கடமை என கருத்து கூறியுள்ளது. இதையெல்லாம் உணர்ந்து 2011ஆம் ஆண்டிலிருந்தே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காரணமாக ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுதொடர்பான வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவியர் ஆன்லைனில் கல்வி பயில தேவையான டிஜிட்டல் கருவிகளை டெல்லி அரசு, பள்ளி நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கில் தான் இந்தக் கருத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்கள், வாடகை ஓட்டுநரின் பிள்ளைகள்கூட நல்ல பள்ளிகளில் சேர முடியும். ஆனால் அந்த பெற்றோரால் தங்கள் குழந்தைகளுக்கு லேப்டாப் வாங்கிக் கொடுக்க முடியுமா என்று வினவிய நீதிமன்றம், லேப்டாப் வழங்குவது அரசின் கடமை என்று கூறியுள்ளது.