இந்தியாவை நெருங்கும் ஆபத்து... தலைநகரில் 2 டோஸ் போட்டுக் கொண்டவருக்கு ஒமைக்ரான்!
டெல்டா கொரோனாவால் இந்தியாவில் இரண்டாம் அலை ஏற்பட்டது. நாடு கடும் விளைவுகளைச் சந்தித்தது. இச்சூழலில் டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் கொரோனாவால் மூன்றாம் அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. மீண்டும் ஊரடங்கு வந்தால் நிலைமை என்னாவது என மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக மும்பையில் இதுவரை 17 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
அதேபோல் இன்னும் சிலரின் பயண வரலாறே தெரியவில்லை. இதனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மும்பையில் 144 தடை உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் மாஸ்க் அணியும் பழக்கம் குறைந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கும் மத்திய சுகாதார துறை, இந்தியா ஆபத்தான நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளது. மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மும்பை தவிர ராஜஸ்தானில் ஒன்பது பேரும் குஜராத்தில் மூன்று பேரும் கர்நாடகாவில் இரண்டு பேரும் டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இச்சூழலில் தற்போது தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் என்பதே இதில் கவனித்தக்கது. அதேபோல அவர் ஜிம்பாப்வே நாட்டிலிருந்து டெல்லி வந்தவர். முன்னதாக ஒமைக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்காவிற்கும் போய் வந்திருக்கிறார். இதனால் டெல்லி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.