ராகுல் காந்தியை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது - சஞ்சய் ராவத்

 
sanjay rawat

ராகுல் காந்தியை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது என உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக  சூரத் பெருநகர மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . அத்துடன் அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைதாண்டனை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார்.  ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகுல்காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி தொடர்வார். இருப்பினும் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க தாமதம் ஏற்பட்டது. 

rahul

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா  எம்.பி. சஞ்சய் ராவத்,  ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த வேகம், உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மீண்டும் பதவி வழங்க இல்லை. மத்திய அரசு ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறது. அதனால் தான் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க காலம் தாழ்த்தி வருகிறது என்றார்.