5 பிரச்சினைகளுக்கு 1 தீர்வு... "ஸ்நாக்ஸாக" மாறிய டோலா 650... அடுக்கி வச்சா புர்ஜ் கஃலீபாவே தோத்துருமாம் - ஆச்சர்ய டேட்டா இதோ!
இந்தியாவில் கோவிட் 19, கொரோனா, ஊரடங்கு, மாஸ்க், தடுப்பூசி என்ற வார்த்தைகளுக்கு அடுத்தப்படியாக அதிகமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தை Dolo 650-ஆகவே இருக்கும். கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை நீங்களா நானோ பெரும்பாலான மக்களோ இந்த மாத்திரையை ஒருமுறையாவது உட்கொண்டிருப்போம். சாதாரண காய்ச்சல், உடல்வலி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் உண்டாகும் பக்கவிளைவுகளுக்கும் அருமருந்தாக அமைந்துள்ளது டோலா 650. இந்தியாவில் 2020ஆம் ஆண்டு கொரோனா பரவ ஆரம்பித்தது.
அன்றிலிரிந்து இப்போது வரை 350 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் விற்பனையாகியிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனாவின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் தான் அனைவரையும் டோலோ 650ஐ நோக்கி மக்களை தள்ளியிருக்கிறது. இம்மாத்திரையின் விற்பனை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்துள்ளது, அதே சமயம் சளி, காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் அதிகம் உட்கொள்ளப்படும் மருந்துகளாகவும் இருக்கின்றன. 350 கோடி டோலா மாத்திரைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்தால், அது உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை விட 6,000 மடங்கு உயரமாக இருக்கும்.
உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபாவை விட 63,000 மடங்கு உயரமாக இருக்கலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், அது தான் உண்மையும் கூட. டோலோ 650, 1.5 செ.மீ. நீளமுள்ள மாத்திரை, கடந்த 2 ஆண்டுகளில் பாராசிட்டமால் மாத்திரையான குரோசினை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நிறுவனமான IQVIA-இன் தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டில் கொரோனா பரவுவதற்கு முன்பு இந்தியாவில் சுமார் 7.5 கோடி டோலோ மாத்திரைகளை விற்பனையாகியுள்ளன. ஆனால் 2020ஆம் ஆண்டில் 141 கோடி மாத்திரைகளும் 2021 நவம்பர் மாத நிலவரப்படி பார்த்தால் 217 கோடி மாத்திரைகளும் விற்று தீர்ந்துள்ளன.
2020 செப்டம்பரில் முதல் அலையும் கடந்தாண்டு மே மாதம் இரண்டாம் அலையும் வந்தன. இந்தக் காலக்கட்டங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த இரண்டு அலைகளிலும் சேர்த்து தான் 350 மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி பார்த்தால் டோலோ 650 2021ஆம் ஆண்டில் ரூ.307 கோடி வருமானம் பெற்று இந்தியாவில் விற்பனையாகும் காய்ச்சல் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளின் தரவரிசையில் 2ஆம் இடம் பிடித்துள்ளது. அதேசமயம் ஜிஎஸ்கேயின் கால்போல் (Calpol) ரூ.310 கோடி வருமானம் பெற்று முதலிடத்தில் உள்ளது. ரூ.23.6 கோடி இரட்டை இலக்க விற்பனையுடன் குரோசின் ஆறாம் இடத்தில் இருக்கிறது.
டோலோ 650-இன் வெற்றிக்கு காரணம், குரோசின் போல் அல்லாமல், இன்னும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நம்பகமான மருந்தாக இருப்பதுதான். இது அனைத்து வயதினருக்கும் கொடுக்கப்படலாம் என்பதாலும் குறைந்த பக்க விளைவுகள் மட்டுமே உள்ளதாலும் மருத்துவர்கள் டோலோ 650-ஐ பரிந்துரைக்கின்றனர். அறியப்படாத நோய்களால் ஏற்படும் காய்ச்சலுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதும் மற்றொரு காரணம். இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் எடுத்துக்கொள்ளும் வகையில் இம்மாத்திரை அமைந்துள்ளதே அதன் சிறப்பு.
இதனால் தான் சமூக வலைதளங்களில் டோலா 650 மருந்தை மக்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். மக்கள் இம்மருந்தை வானிலிருந்து இறங்கிவந்த தேவதூதனாகவோ ரட்சகனாகவோ தான் பார்க்கிறார்கள். டோலோ 650 mg, 500 mg ஐ விட சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. டோலோ 650 மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. இது பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். இந்நிறுவனம் 1973ஆம் ஆண்டில் மருந்து விநியோகஸ்தர், ஜி.சி. சூரனா என்பவரால் நிறுவப்பட்டது. நிறுவனத்தின் இணையதள தகவல்படி அதன் ஆண்டு வருவாய் ரூ.2,700 கோடியாகும். இதில் ரூ.920 கோடி ஏற்றுமதியும் அடங்கும்.