புதுச்சேரியில் நோ பேக் டே - பையில்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
புதுச்சேரியில் மாதத்தின் கடைசி வேலை நாளான இன்று நோ பேக் டேவாக கடைப்பிடிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று பையில்லாமல் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி புத்தகப்பை திட்டத்தை வெளியிட்டது. ஆண்டிற்கு குறைந்தது பத்து நாட்களாவது மாணவர்கள் புத்தகப் பை இன்றி பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்றும், இந்த நாட்களில் கலை, வினாடி வினா , விளையாட்டு, கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது. இதன் காரணமாக புதுச்சேரி கல்வித்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில், இனி மாதத்தில் கடைசி வேலை நாளில் புத்தகப் பை கிடையாது , அந்த நாள் விடுமுறை நாளாக வரும் பட்சத்தில் முந்தைய நாளை புத்தகப் பை இல்லாத நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று மாதத்தின் கடைசி வேலை நாளான இன்று புதுச்சேரியில் இன்று நோ பேக் டே அனுசரிக்கப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகள் புத்தகப் பை இன்றி பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர். இன்றைய தினத்தில் கைவினைப் பொருட்கள், வினாடி வினா, கதை சொல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.