வக்ஃபு வாரிய சட்ட விதிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
வக்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறாரா? என்பதை முடிவு செய்வதற்கான விதிகளை மாநில அரசுகள் வகுக்கம் வரை முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முழு முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வக்ஃபு வாரியம் தொடங்க ஒருவர் குறைந்தபட்சம் 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நிபந்தனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை முடிவு செய்ய கலெக்டர் அனுமதிக்கப்பட முடியாது, இது அதிகாரப் பிரிவினையை மீறும் செயலாகும். தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை, எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, கலெக்டர்களுக்கு அத்தகைய அதிகாரங்களைக் கையாளும் விதி நிறுத்தி வைக்கப்படுகிறது. வக்ஃப் வாரியத்தில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் மொத்தத்தில் 4 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் நாங்கள் கருதுகிறோம் எனக் கூறியுள்ளனர்.
வக்பு திருத்த சட்டத் திருத்தத்தின் 2 பிரிவுகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “உச்சநீதிமன்ற உத்தரவு இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை
2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை
3) ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)
4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.
இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


