"மும்பையில் ஆரம்பமானது 3ஆம் அலை... 80% ஒமைக்ரான் கேஸ்கள்?" - ஷாக் நியூஸ்!
கொரோனா வைரஸ் ஒவ்வொரு முறை உருமாறும்போதும் ஒரு அலையை கொண்டுவந்துவிடும். முதலில் பரவ தொடங்கியா சாதா வகை கொரோனா இந்தியாவில் முதல் அலையை உருவாக்கியது. அடுத்ததாக இந்தியாவிலேயே உருமாறிய டெல்டா வகை இரண்டாம் அலையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் அலையில் இந்தியா பட்ட பாடுகள் தான் எத்தனை? துரத்தி துரத்தி அடித்தது. உலக நாடுகளே இந்தியாவின் நிலை கண்டு கண்ணீர் வடித்தன. அந்தளவிற்கு ருத்ரதாண்டவமாடி கடந்த ஜூலை மாதம் தான் ஓரளவு கட்டுக்குள் வந்தது.
அதேபோல இந்தியாவில் மூன்றாம் அலை நவம்பர் அல்லது டிசம்பரில் வரலாம் என நிபுணர்கள் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் சொன்னது போல எந்த அலையும் வரவில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தின. ஆனால் அப்போது தான் ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் என்ட்ரியானது. இருப்பதிலேயே அபாயகரமானது டெல்டா வகை தான். ஆனால் அதையே தூக்கி சாப்பிடும் வகையில் மின்னல் வேகத்தில் பரவுகிறது ஒமைக்ரான்.
ஆனால் பெரிதாய் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஒரே மாதத்தில் உலகம் முழுவதும் பரவிவிட்டதென்றால் அதன் வேகத்தை எளிதாகவே கணிக்க முடியும். இந்தியாவில் ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது ஒமைக்ரான் பாதிப்பு. அதில் 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் மகாராஷ்டிரா இரண்டாமிடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக மும்பையில் தான் அதிகம். இதனுடன் டெல்டா கொரோனாவும் சேர்ந்துகொண்டது. இரண்டும் சேர்ந்து தாக்குகின்றன. இதனை கருத்தில்கொண்டு இரு வாரத்திற்கு முன்பே அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
தற்போது அங்கு மூன்றாம் அலை உருவாகிவிட்டதாக மகாராஷ்டிர மாநில கோவிட் சிறப்பு தடுப்பு குழு உறுப்பினர் ஷஷாங்க் ஜோஸி கூறியுள்ளார். அவர், "கடந்த 24 மணி நேரத்தில் 2,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 80 சதவீத கேஸ்கள் ஒமைக்ரானாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் சர்வநிச்சயமாக அது டெல்டா வகை அல்ல. 4 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்படைந்துள்ளது. ஆம் மும்பையில் 3ஆம் அலை தொடங்கிவிட்டது. இருந்தாலும் பயப்பட வேண்டாம். லேசான பாதிப்பே ஏற்படுகின்றன. வீட்டிலிருந்தே குணப்படுத்திக் கொள்ள முடியும் ” என்றார்.