பிரதமர் மோடியை புறக்கணித்த தெலங்கானா முதல்வர்!
தெலங்கானாவில் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தெலுங்கானாவில் 13 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்து பல திட்டங்களை தொடங்கி வைக்க சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஷம்ஷாபாத் விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் மகபூப்நகருக்கு செல்கிறார். மகபூப்நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். அதன்பிறகு ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார்.
பிரதமர் வருகையை மரியாதை பூர்வமாக வரவேற்பதை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மீண்டும் புறக்கணித்தார். தெலங்கானாவில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி நூதன முறையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பிரதமர் மோடி இன்று மகபூப்நகர் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் போலவரம் திட்டத்துக்கும், கர்நாடகாவில் அப்பர் பத்ரா திட்டத்துக்கும் தேசிய அந்தஸ்து அளிக்கப்பட்டது. தெலுங்கானாவில் உள்ள பாலமுரு திட்டத்துக்கு தேசிய அந்தஸ்து வழங்கப்படவில்லை என ஃப்ளெக்ஸ் ஒட்டப்பட்டு ஒன்றிய மோடி அரசு தெலுங்கானாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு வெளியே பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் நூதன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. விமான நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘என்ன நடந்தது மோடி?’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாலமுரு ரங்காரெட்டி நீர்தூக்கி பாசன திட்டத்தின் தேசிய அந்தஸ்து என்ன ஆச்சு ? உங்கள் உறுதிமொழிகள் அனைத்தும் தண்ணீரில் எழுதியது போல் மற்றும் மோடியின் படத்தை ராவணாசுரனின் தலையுடன் இணைத்து விமர்சித்து ஒட்டப்பட்டது.
காஜிப்பேட்டை ரயில்வே கோச் பேக்டரி, டெக்ஸ்ட் டைல் பார்க், டிஃபென்ஸ் காரிடார், மிஷன் பகீரத நிதி, பழங்குடியினர் பல்கலைக் கழகம், மஞ்சள் வாரியம் ஆகிய இடங்களில் ராவணசுரன் தலையுடன் மோடி பேனர் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று மகபூப்நகர் வருகையின் பின்னணியில், ஹைதராபாத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் விவாதப் பொருளாகியுள்ளது. ஆனால் இந்த போஸ்டர்களை ஒட்டியது யார்? என்று தெரியாத நிலையில் இவற்றை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என, பா.ஜ.,வினர் முழக்கம் இட்டனர்.