டெல்லியில் இதுவரை நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்கள்!
இந்தியாவின் தலைநகரான டெல்லி, சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாகவே காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்கள், காலிஸ்தான் அமைப்புகள் மற்றும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களின் இலக்காக இருந்துள்ளது. குறிப்பாக 1990-களின் இறுதி முதல் 2011 வரையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் குறிவைக்கப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் டெல்லியை உலுக்கியுள்ளன.

1996 ஆம் ஆண்டு மே 21 அன்று டெல்லியின் பரபரப்பான லாஜ்பத் நகர் சந்தையில் நடந்த குண்டுவெடிப்பு, தலைநகரை உலுக்கிய முதல் பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். இந்தச் சம்பவத்தில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 38 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிக் ஃப்ரண்ட் (Jammu Kashmir Islamic Front) அமைப்பு பொறுப்பேற்றது.இதைத் தொடர்ந்து, 1997 அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கரோல் பாக், ராணி பாக், பஞ்சாபி பாக் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. டிசம்பர் 30 அன்று பஞ்சாபி பாக் அருகே பேருந்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மட்டும் நான்கு பயணிகள் உயிரிழந்தனர்.
2000 செங்கோட்டை தாக்குதல்
டிசம்பர் 22, 2000 அன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை வளாகத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா (LeT) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
2001 நாடாளுமன்றத் தாக்குதல்
டெல்லியின் வரலாற்றில் மறக்க முடியாத கருப்பு நாளாக டிசம்பர் 13, 2001 திகழ்கிறது. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் மற்றும் ஊழியர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் ஐந்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2005 தீபாவளிக்கு முந்தைய தாக்குதல்
தீபாவளிப் பண்டிகைக்குச் சற்று முன்னர், அக்டோபர் 29, 2005 அன்று, சரஜோனி நகர், பஹாரகஞ்ச் சந்தை, கோவிந்த்புரி என மூன்று பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 59க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தியன் முஜாஹிதீன் தாக்குதலும், நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பும் (2008 - 2011)
2008 செப்டம்பர் 13 அன்று டெல்லி நகரின் மையப் பகுதிகளான கன்னாட் பிளேஸ், கஃப்பார் மார்க்கெட், கிரேட்டர் கைலாஷ் ஆகிய பகுதிகளில் 45 நிமிடங்களுக்குள் ஐந்து தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் குறைந்தது 25 பேர் பலியாகினர். இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் (Indian Mujahideen) அமைப்பு பொறுப்பேற்றது.
இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 7, 2011 அன்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் வாயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர்; 66 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (HuJI) அமைப்பு பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது.


