காஷ்மீரில் பயங்கர துப்பாக்கிச் சண்டை - பயங்கரவாதி சுட்டுக்கொலை

 
kashmir

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான். 

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ரஜோரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  

இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்நிலையில், பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர். இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவர் எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.