ரயில்வே கேட் மீது மோதிய டிராக்டர்....பெரும் விபத்து தவிர்ப்பு!

 
train

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே கேட் மீது டிராக்டர் ஒன்று மோதிய நிலையில், ரயில் ஓட்டுநர் சுதாரித்துகொண்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தின் துயரத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில்  மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,  ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே கேட் மீது டிராக்டர் ஒன்று மோதிய நிலையில், ரயில் ஓட்டுநர் சுதாரித்துகொண்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகோரா மாவட்டம், போஜுதிஹ் ரயில் நிலையம் அருகே சந்தால்டிஹ் ரயில்வே கேட் உள்ளது. நேற்று மாலையில் அந்த வழித்தடத்தில் டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இதனால் ரயில்வே கிராசிங் மூடப்பட்டது. ரயில் வந்துகொண்டிருந்தசமயத்தில், அந்த கிராசிங்கின் கேட்டில் ஒரு டிராக்டர் திடீரென மோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ரயில் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தினார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில்வே கேட் மீது டிராக்டர் மோதியதும் டிரைவர் கீழே இறங்கி தப்பிச் சென்றுவிட்டார். அந்த டிராக்டர், ரெயில்வே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.