இந்திய ராணுவத்தின் தரமான பதிலடி... 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர்!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் நகரில் நேற்று பயங்கரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் ஐந்து பேர் வீரமரணமடைந்ததாக தகவல் வெளியானது. இச்சூழலில் இன்று மூன்று பயங்கரவாதிகளை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். தேரா கி காலிக்கு அருகில் உள்ள சோபியான் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்று தேடுதல் வேட்டையை தொடங்கிய பாதுகாப்பு படையினர் பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகளை என்கவுண்டர் செய்தனர்.
சமீப நாட்களாக ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் இருக்கும் இந்து மற்றும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து செயல்படும் எதிர்ப்பு முன்னணியினர் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்கல் தொடுக்கிறது. ஸ்ரீநகர் புறநகர் பகுதியான சங்கம் இட்கா என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர். அந்தப் பள்ளியில் துப்பாக்கிகளோடு புகுந்த பயங்கரவாதிகள் இருவரையும் பயங்கரமாக சுட்டுக் கொன்றனர்.
அதேபோல காஷ்மீர் பண்டிட்களின் மீதும் பயங்கவரவாதிகள் தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். இதுவரை ஐந்து பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பயங்கரவாதிகளைக் கண்டறிந்து பதில் தாக்குதல் தொடுக்க இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது. அதன்படி பயங்கரவாதிகள் தலைமறைவாகியிருக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்போது தான் பூஞ்ச் நகரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இந்திய வீரர்கள் ஐந்து பேரை சுட்டுப் படுகொலை செய்தனர்.