தமிழ்நாடு தான் டாப்... பாலியல் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் - சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை!
கொரோனா காலத்தில் பல்வேறு தரப்பு மக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர்கள் பாலியல் தொழிலாளர்கள் தான். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தொழில் செய்ய முடியாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட பரிதவித்தனர். அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி கடந்தாண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு கேட்காமல் இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கிட வேண்டும் என்றது.
மேலும் இதுதொடர்பான பயனாளிகள் பற்றிய அறிக்கையை மாநில அரசுகள் வழங்க வேண்டும். இந்தப் பணிகளை கவனிக்க நீதிமன்றம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிஜுஸ் காந்தி ராய் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் ஆணையிட்டது. அதன்படி மாநில மற்றும் யுனியன் அரசுகளிடம் அறிக்கை பெற்று பிஜுஸ் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாட்டில் 85 ஆயிரத்து 504 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 73 ஆயிரத்து 381 பேரிடம் ரேஷன் கார்டு இருக்கிறது.
அவர்களுக்கு ரேஷன் பொருட்களைக் கூட்டுறவு சந்தைகள், கூட்டுறவு சூப்பர் மார்க்கெட், அம்மா மினி கூட்டுறவு, நடமாடும் பசுமை காய்கறிகள் திட்டம் ஆகியவை மூலம் அனைத்துப் பாலியல் தொழிலாளர்களுக்கும் இலவசமாகப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல குஜராத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் மாநில அரசின் இலவச ரேஷன் பொருட்களை வாங்க விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.