ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..?? நாளை உ.பி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை..
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டபேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அண்மையில் நடந்து முடிந்தன. மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்த உ.பி. சட்டசபை தேர்தலில் மொத்தம் 61.04% வாக்குகள் பதிவாகி யிருந்தன. அதேபோல் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு மொத்தம் 71.95% வாக்குகள் பதிவாகின.
உத்தரகாண்ட் மாநிலத்திலும், கோவாவிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்டில் மொத்தம் 65.37 % வாக்குகள் பதிவானது. அதேபோல் 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் 79.61% வாக்குகள் பதிவாகின. இதில் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 8 மற்றும் மார்ச் 5-ந் தேதி என 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு மொத்தமாக சுமார் 74% வாக்குகள் பதிவாகின. இந்த 5 மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன.
இதில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இருக்கிறது. 403 தொகுதிகளைக் கொண்ட உ.பி. யில் ஆட்சிப் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் வெற்றி பெற வேண்டும். அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி ஆஜிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபொல் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க 59 இடங்கள் தேவை.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியை கைப்பற்றலாம். அதேபோல் 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் பெரும்பான்மை பெற 21 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். மணிப்பூரில் 60 தொகுதிகளில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். நாளைய தேர்தல் முடிவில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.