ரூ.2 கோடி மதிப்பிலான மின்சார பேருந்தை திருடி சென்ற மர்மநபர்! இடையே பேட்டரி சார்ஜ் இல்லாததால் விபரீதம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான மின்சார பேருந்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காக தேவஸ்தானம் சார்பில் 10 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்பட்டு வந்த பேருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு திருமலையில் எச்.வி.சி. காட்டேஜ் அருகே நிறுத்தி வைத்து டிரைவர் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் பேருந்தை எடுத்துச் சென்றுள்ளார்.
டிரைவர் டீ குடித்துவிட்டு அங்கு வந்து பார்த்தபோது பேருந்து காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பேருந்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தேவஸ்தான அதிகாரிகள் திருமலை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பேருந்தில் உள்ள ஜீ.பி.எஸ். கொண்டு பேருந்தை தேடி வந்த நிலையில், பேருந்தை திருமலையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நாயுடுப்பேட்டை அருகே இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அங்கு சென்று பேருந்தை மீட்டனர். பேருந்தில் இருந்த பேட்டரி சார்ஜிங் தீர்ந்ததால் பேருந்தை திருடி சென்றவர் விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். பேருந்தை திருடி சென்றது யார்? எதற்காக கொண்டு சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.