நாடு முழுவதும் நேரடி தேர்வு மட்டுமே நடத்த வேண்டும் - யுஜிசி உத்தரவு!
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு சாதாரண தேர்வுகள் முதல் செமஸ்டர் தேர்வுகள் வரை ஆன்லைன் வழியாகவே நடைபெற்றன. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துவிட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதில்லை.
பெரும்பாலான மாநிலங்களில் ஆன்லைன் வழியே வகுப்பைக் கவனிக்க நினைப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சுழற்சி முறையும் நிறுத்தப்பட்டது. கொரோனா முழுவதுமாக குறைந்துவிட்டதால் நேரடி தேர்வு நடத்த பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தீர்மானித்துள்ளன. ஆனால் மாணவர்கள் மத்தியில் இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்திவிட்டு, தேர்வை நேரடியாக நடத்துவது சரியான அணுகுமுறை அல்ல என மாணவர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அரசு அதற்கு இசையவில்லை. நேரடி வகுப்புகள், நேரடி தேர்வுகள் என்பதில் தீர்க்கமாக கூறிவிட்டது. இச்சூழலில் பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC) நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நேரடி தேர்வே நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.