"மக்களே ஜாக்கிரதை... தினசரி 14 லட்சம் பேர கொரோனா அட்டாக் பண்ணலாம்" - மத்திய அரசு வார்னிங்!
உலகளவில் இங்கிலாந்து நாடு தான் இப்போது கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதத்துக்கு மேலான பாதிப்பு புதியவகை அதிவேக ஒமைக்ரான் கொரோனாவால் ஏற்பட்டவை. மீதமுள்ள பாதிப்புகள் டெல்டா உள்ளிட்ட மற்ற உருமாறிய கொரோனா வகைகளால் உண்டானவை. அந்நாட்டு சுகாதார துறையே தற்போது ஆட்டம் கண்டுள்ளது. பல கொரோனாக்கள் ஒருசேர தாக்குவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அந்நாட்டு மக்கள்தொகையே 6.7 கோடி தான். ஆனால் இதுவரை அங்கே 1.2 கோடி மக்களை கொரோனா தாக்கிவிட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்கு கட்டுபாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் பூஸ்டர் டோஸ் போடும் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளார். இங்கிலாந்தின் நிலைமை உலக நாடுகளைக் கலக்கமடைய செய்துள்ளது. அங்கே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவில் ஏற்பட்டால், தினசரி 14 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என கோவிட் தடுப்புக் குழு தலைவர் விகே பால் எச்சரித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "ஐரோப்பிய நாடுகளில் புதிய கொரோனா அலை உருவாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அங்கு கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. டெல்டாவும் ஒமைக்ரானும் இணைந்து புதிய அலையை உருவாக்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் நிலைமை மோசமடைந்துள்ளது. இவையெல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்று தான். அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவிற்கும் வந்தால் இங்குள்ள் மக்கள்தொகையின் அடிப்படையில் நாள்தோறும் 14 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.
அதேபோல தேவையற்ற பயணங்கள், பொது இடங்களில் மொத்தமாக கூடுவது திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆர் இயக்குநார் பல்ராம் பார்கவா வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. மொத்தமாக 101 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. லேசான அறிகுறிகளே தென்படுவதால் மருத்துவமனை கூட செல்ல அவசியம் உண்டாகவில்லை என சொல்லப்படுகிறது. இருப்பினும் டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்து தாக்கினால் நிலைமை மோசமாகிவிடும்.