போக்குவரத்து போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் - வெயிலில் இருந்து தப்பிக்க புது ஐடியா
நாட்டில் பல நகரங்களில் வெயில் மக்களை வாட்டிவதைத்து வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேறாமல் கூட இருந்து வருகின்றனர். இருப்பினும் மக்கள் பணி செய்யும் ஊழியர்கள் அவ்வாறு இருந்துவிட முடியாது. குறிப்பாக சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார் வெயிலில் நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது . போலீசார் வெயிலினால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை அதிகமாக எதிர்கொள்கின்றனர்.
இந்த சூழலில் குஜராத் மாநிலம் வதோதராவில் போக்குவரத்து போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் அளிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த ஹெல்மெட்டை அணிந்து போக்குவரத்து போலீசார் பணியாற்றி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஐஐஎம் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த ஹெல்மெட் பேட்டரியில் இயங்கக்கூடியது.
#WATCH | Gujarat: Vadodara Traffic Police provided AC helmets to its personnel to beat scorching heat waves in summer. pic.twitter.com/L3SgyV2uEm
— ANI (@ANI) April 17, 2024
#WATCH | Gujarat: Vadodara Traffic Police provided AC helmets to its personnel to beat scorching heat waves in summer. pic.twitter.com/L3SgyV2uEm
— ANI (@ANI) April 17, 2024
ஹெல்மெட்டில் உள்ள பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது . அதற்கான பேட்டரியை போலீசார் இடுப்பில் அணிந்து கொள்ளலாம். பேட்டரிக்கும் ஹெல்மெட்டில் உள்ள ஃபேனும் வயர் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. ஹெல்மெட்டின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் எட்டு மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாக 450 போலீசாருக்கு இந்த ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது .
ஏற்கனவே குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.