ஜூலை 1 முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்.. டெல்லி அரசு நடவடிக்கை..!!
டெல்லியில் காலாவதியான வானங்கள் பறிமுதல் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, இந்த காற்று மாசு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆகையால் டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெட்ரோல் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லியில் பழைய வாகனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவினை உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததால், தற்போது மத்திய அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி டெல்லியில் மொத்தம் 62 லட்சம் காலாதியான வாகனங்கள் இருப்பதாகவும், அவற்றில் 41 லட்சம் இருசக்கர வாகனங்களும், 18 லட்சம் 4 சக்கர வாகனங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இனி டெல்லியில் இந்த காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலாவதியான வாகனங்கள் சாலையில் இயக்கினால் அவற்றை பறிமுதல் செய்து உடைப்பதற்கு அனுப்பப்படுகின்றன. அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் வாகனங்களுக்கும் முதன்முறையாக அபராதமும் விதிக்கப்பட இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் சிறப்பு கேமராக்கல் பொருத்தப்பட்டு காலாவதியான வாகனங்கள் பயன்பாட்டினை கண்காணிக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.


