கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நாளை வாக்குப்பதிவு - ஏற்பாடுகள் தீவிரம்!

 
Karnataka

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

224 தொகுதிகளை கொண்ட  கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மே -13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்ட  நிலையில் , தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர்.  கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனை போட்டிகள் நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸும், ஜனதா தளமும் தீவிர முனைப்புடம்  பரப்புரையில் ஈடுபட்டனர். பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,  காங்கிரஸ் தரப்பில்  ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும்  ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தெவகவுடா உள்ளிட்ட தலைவர்களும் , வேட்பாளர்களும்  சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விரிவாக செய்துள்ளது. வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்தல் பணியில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 153 அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு லட்சத்து 56 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.