போஸ் கொடுத்து போட்டோ எடுக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை - மத்திய அமைச்சரின் செயலுக்கு மன்மோகன்சிங் மகள் அதிருப்தி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குணமடைந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சென்றிருக்கிறார். அப்போது தன்னுடன் ஒரு போட்டோகிராபர் பட்டாளத்தினையே அழைத்துச் சென்றிருக்கிறார். இதை மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர் விரும்பவில்லை.
வயதில் முதியவர் என்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைவாக இருப்பதாலும் தொற்று பாதிப்பு அபாயம் இருப்பதால் அவர் சிகிச்சை பெறும் அறைக்குள் பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்காமல் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் சூழலில் புகைப்படக்காரர்கள் பட்டாளத்துடன் அமைச்சர் சென்றதை மன்மோகன்சிங் மனைவி தடுத்திருக்கிறார். ஆனால் அவரது பேச்சையும் கேட்காமல் உள்ளே நுழைந்து சென்றிருக்கிறார்கள். இதில் மன்மோகன்சிங் குடும்பத்தினர் மிகவும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இதுகுறித்து அவரது மகள், என் தந்தை ஒன்றும் உயிரியல் பூங்காவில் இருக்கும் மிருகமல்ல. முதியவர் அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கின்றோம். அதனால் பார்வையாளர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. தந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இதை கடைபிடித்து வருகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் வந்து விசாரித்தது மகிழ்ச்சி. ஆனாலும் இப்படிப்பட்ட சூழலில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கும் மனநிலையில் என்னுடைய பெற்றோர் இல்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மன்மோகன் சிங் மகள் தெரிவித்த இந்த அதிருப்தியை அடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் செயலை காங்கிரஸ் கட்சியினர் தங்களது வலைதளங்களில் பரப்பி, அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.