எது உண்மை?... எந்த வயது குழந்தைகளுக்கு வேக்சின்? - பிரதமர் பேச்சால் எழுந்த சர்ச்சை!
அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் மட்டும் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்தியாவில் குழந்தைகளுக்கு எப்போது தான் தடுப்பூசி கிடைக்கும் என பெற்றோர்கள் ஏங்கி கொண்டிருந்தனர். ஆனால் அரசுத் தரப்போ, தடுப்பூசி குழந்தைகளுக்கு என்பதால் கூடுதல் ஆராய்ச்சிகள் அவசியம்; அதனால் தான் தாமதம் செய்யப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக கோவிட் தடுப்பு சிறப்பு குழுவும் அவசர கதியில் எதையும் உடனே செய்ய முடியாது என்றது.
இச்சூழலில் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து பேசினார். உரையாற்றிய அவர், "இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு (Covaxin - BBV152) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அதே போல ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்” என்றார்.
இதனிடையே கோவாக்சினை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் 12 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு மையத்தில் (DCGI) விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த டிசிஜிஐ, நேற்று கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதியளித்தது. முன்னதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (CDSCO) 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோவாக்சின் பரிசோதனைகளின் தரவுகளை சமர்பித்திருந்தது. அந்த அமைப்பு பரிந்துரையின்படியே டிசிஜிஐ அனுமதி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கையும் வெளியிட்ட கோவாக்சின், 12-18 வயதுட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பூசிகளை வழங்கப் போவதாக தெரிவித்திருந்தது. இந்தியாவில் ஏற்கெனவே Zydus Cadila (ஜைகோவ்-டி வேக்சின்) நிறுவனத்தின் 3 டோஸ் கொண்ட தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் இவ்வாறு சொல்ல பிரதமர் மோடியோ 15-18 வயது கொண்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என சொல்லியிருக்கிறார். இதனால் குழப்பம் நிலவி வருகிறது.