மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. 128வது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது. தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் சுமார் 8 மணி நேர விவாதத்துக்குப் பின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஒட்டுமொத்தமாக உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்கு சீட்டின் மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு 454 பேர் ஆதரவும், 2 எம்பி-க்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். வாக்குச்சீட்டின் அடிப்படையிலான வாக்கெடுப்பில் அறுதி பெரும்பான்மை வாக்குகளை பெற்று மசோதா நிறைவேறியது.
இந்நிலையில், மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று மாநிலங்களவையில் இன்றே இந்த மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.