வெளுத்து வாங்கும் மழை! கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

 
Rain

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், 9 மாவட்டங்களுக்கு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முதலில் அறிவித்திருந்தது. இருப்பினும்  ஜூன் 5-ம் தேதிக்கு மேல் பருவமழை தொடங்கினால், அது தாமதமாக தொடங்கியதாக கருதப்படும்.  அந்த வகையில், இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியியது.  அதன்படி நேற்று கேரளா , தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.கோழிக்கோடு, அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தாமதமாக தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், கனமழை காரணமாக கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வருகிற 12-ந் தேதி வரை மாநில நிர்வாகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மலையோர பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோர கிராமங்களில் சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.