திடீரென திருமணம் நிற்கிறதா? பணம் விரயமாகிறதா? - அப்போ இந்த பாலிசி உங்களுக்கு தான்!
காப்பீடு என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அடுத்த நொடி நிச்சயமில்லா வாழ்வு என்பதால் காப்பீடு அத்தியாவசியமானது. மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு, விபத்து காப்பீடு, பயிர் காப்பீடு என பல வகைகள் உண்டு. திருமண காப்பீடு (Wedding Insurance) குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் கொரோனா பரவல் தான் இந்த புதிய வகை காப்பீட்டை உருவாக்கச் செய்துள்ளது. கொரோனா எனும் பெருந்தொற்று ஒட்டுமொத்த உலக இயங்கியலை மாற்றியமைத்துள்ளது. அதில் திருமண நிகழ்வுகளும் விதிவிலக்கல்ல.
இந்தியாவை பொறுத்தவரை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் ஏராளமான திருமணங்கள் தடைப்பட்டன. முன்கூட்டியே திட்டமிட்டு அதிகமான பணத்தைச் செலவளித்து அனைத்துப் பணிகளையும் முடிக்கும் தருவாயில் சில திருமணங்களை கொரோனா பரவல் தடுத்து நிறுத்தியது. சில திருமணங்கள் அரசு பிறப்பித்த உத்தரவுகளால் ரத்து செய்யப்பட்டன. பல திருமணங்கள் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இல்லாததால் ரத்தாகின. இதனால் திருமணம் நடத்தும் வீட்டாருக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது.
இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் திருமண சீசன் முடிந்துவிட்டது. அடுத்த திருமண சீசன் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் வரவுள்ளது. ஆனால் இச்சூழலில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் திருமணங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் கைகொடுக்க வந்திருக்கிறது புதிய வகை திருமண காப்பீடு. கடைசி நேரத்தில் திருமணத் திட்டம் ரத்து செய்யப்படுவதையோ அல்லது மாற்றப்படுவதையோ யாரும் விரும்புவதில்லை தான். ஆனால் அப்படியொரு சூழல் ஏற்படுவதை நம்மால் மாற்ற முடியாது அல்லவா?
திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது திருமணத்தின் தேதியை மாற்ற வேண்டும் போன்ற சமயங்களில் திருமண காப்பீடு உங்களுக்கு பண இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.திருமண காப்பீடு பாலிசி உங்கள் திருமண பட்ஜெட்டை பொறுத்து அமையும். உதாரணமாக நீங்கள் நீங்கள் ரூ.10 லட்சம் திருமண காப்பீடு பெற்றிருந்தால், ரூ.7,500 முதல் 15,000 வரை பிரீமியம் செலுத்த வேண்டும். பிரீமியம் மொத்த காப்பீட்டுத் தொகையில் 0.7-2 சதவிகிதம் வரை மட்டுமே இருக்கும். இந்த காப்பீடு, திருமணம் ரத்து அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்படும் பெரும் செலவுகளை உள்ளடக்கியது.
பொறுப்பேற்கும் கவரேஜ்: விபத்துகள் அல்லது காயங்கள் காரணமாக திருமண விழாக்களின்போது மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதம், இழப்பை இந்தப் பிரிவு உள்ளடக்கும்.
ரத்துசெய்தலுக்கான கவரேஜ்: திடீரென அல்லது எதிர்பாராவிதமாக திருமணத்தை ரத்து செய்வதால் ஏற்படும் இழப்பை இந்தப் பிரிவு ஈடுசெய்கிறது.
சொத்து சேதம்: இது திருமண நிகழ்வுகளின்போது சொத்து இழப்பு அல்லது சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
தனிப்பட்ட விபத்துகள்: விபத்துக்களால் மணமகன்/மணமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவும் இதில் அடங்கும்.
கேட்டரிங் செய்வோர் (உணவு வழங்குநர்), மண்டபம், விருந்தினர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடு, ஹோட்டல் அறைகள், மேளதாளம், அலங்காரம் ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்வதற்கான அட்வான்ஸ், திருமண அழைப்பிதழ் அச்சிடும் செலவு, அலங்காரங்கள் மற்றும் திருமண செட் செலவு ஆகிய செலவுகளுக்கும் இந்த திருமண காப்பீடு மூலம் காப்பீடு நிறுவனம் பணம் வழங்குகிறது. திருமண நிகழ்ச்சியின்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதை உடனடியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இதற்குப் பிறகு, உண்மைகளைக் கண்டறிய காப்பீட்டு நிறுவனத்தால் விசாரணை நடத்தப்படும் மற்றும் சரியான காரணத்தால் நீங்கள் நஷ்டம் அடைந்திருந்தால், உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு வழங்கப்படும். இருப்பினும் பயங்கரவாத தாக்குதல், வேலைநிறுத்தம், உள்நாட்டு பிரச்சினை, மணமகன்/மணமகள் கடத்தல், திருமண விருந்தினரின் ஆடை மற்றும் தனிப்பட்ட சொத்து இழப்பு, திருமண மண்டபம் கிடைக்காதது, வாகனம் பழுதடைதல், திருமண இடத்தை சேதப்படுத்துதல் போன்ற சூழ்நிலைகளில் திருமண காப்பீட்டில் உங்களால் உரிமை கோர முடியாது.