“அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என யாருக்கும் பாஜக ஆதரவு இல்லை”
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் யாருக்கும் பாஜக ஆதரவு இல்லை அவர்கள் உட்கட்சி பிரச்சனையை அவர்களே முடிவு செய்து கொள்வார்கள் என்றும், அதிமுகவின் பொதுக்குழு கூடும் என எதிர்பார்ப்பதாகவும் பாஜக மாநில துணை செயலாளர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கருமந்துறையில் நடைபெற்ற உலக யோகா தினத்தை யொட்டி தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை செயலாளர் விபி. துரைசாமி கலந்துகொண்டார். பின்பு ஆத்தூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி. துரைசாமி, “தற்போது அதிமுகவில் நிலவி வரும் பிரச்சினைகள் பாஜக தலையிடாது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் என யாருக்கும் ஆதரவு இல்லை, அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள், அதிமுக பொதுக்குழு நடைபெறும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக நடைபெறவில்லை. இங்கு கொலை, கொள்ளை , போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீஸ்துறை முதல்வரிடம் உள்ளதால் முதல்வர் இதை தனிகவனத்தில் கொண்டு உடனடியாக சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும்.
அக்னிபாத் திட்டத்தில் மத்திய அரசாங்கத்தால் 46 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் இளைஞர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டுதலின் பேரில் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரயிலுக்கு தீ வைத்து எரிப்பதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தேச நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் இதுபோன்ற போராட்ட சம்பவங்களை தூண்டி விட மாட்டார்கள், தேச நலனில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும்” என்று கூறினார்.