அடி மேல் அடி - எச்.ராஜா தாக்கு
அயோத்தியா மண்டப விஷயத்திலும் தர்மபுரம் ஆதீன பட்டின பிரவேசம் விஷயத்திலும் தமிழக அரசுக்கு அடி மேல் அடி விழுந்திருக்கிறது. ஒன்றுபட்ட இந்து சக்தி வென்றே தீரும் என்று தெரிவித்திருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பின் சார்பில் கட்டப்பட்டிருக்கும் அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை கையில் எடுத்துக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் பக்தர்களிடம் காணிக்கை பெறுவதை நிரூபிக்கவில்லை என்கிற அடிப்படையில் அறநிலையத்துறை உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
அதே போல், தருமபுரம் ஆதீனத்தில் இம்மாதம் இறுதியில் பட்டினப் பிரவேசத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. சில கட்சிகளின் எதிர்ப்பால் தமிழக அரசு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்திருந்தது. இதற்கு பாஜகவும் ஆதீனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஆதீனங்கள் முதல்வரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். இதை அடுத்து பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து முதல்வர் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மனித நேயத்திற்கு குந்தகம் ஏற்படாமல் தருமபுர ஆதினம் பட்டினபிரவேசம் நடத்த ஆவண செய்யப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார் .
அதன் பின்னர் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்த மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை இல்லை என்று அறிவித்திருக்கிறார்.
அயோத்தியா, தருமபுரம் ஆதீனம் என்ற இரண்டு விசயத்திலும் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ‘’ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும். தமிழக அரசு அடிபணிந்தது. தருமை ஆதீன பட்டினபிரவேச பல்லக்கிற்கு தமிழக அரசு அனுமதி’’என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ‘’அடி மேல் அடி. அயோத்யா மண்டபம் விஷயத்தில் அறநிலையத்துறைக்கு அடி. தருமை ஆதீன பட்டிணப்பிரவேஷ விஷயத்தில் தமிழக அரசு அடிபணிந்தது. ஒன்றுபட்ட இந்து சக்தி வென்றுதீரும். இது சத்தியம்’’என்று தெரிவித்திருக்கிறார்.