செங்கோட்டையன் தலைமையில் நடந்த அதிமுக கூட்டத்தில் நிர்வாகிக்கு அடி உதை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் நிர்வாகிகள் மோதிக்கொண்டனர்.
அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடப்பாடியால் சமீபத்தில் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் செங்கோட்டையன் பேசி முடிக்கும் போது அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி பிரவீன் என்பவர் எழுந்து அதிமுகவின் கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும் நிர்வாகிகள் எந்த தகவலும் தெரிவிப்பதில்லை எனவும் சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. அந்த நிர்வாகியை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் சமரசம் செய்ய முயற்சித்தார். அப்போது அங்கிருந்த சக நிர்வாகிகள் புகார் தெரிவித்த பிரவீனை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அவரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தனர். மேலும் நிர்வாகிகள் அவரை சரமாரியாக தாக்கினர்.
சில நிர்வாகிகள் நாற்காலிகளை தூக்கி அவரை தாக்கினர். இதனால் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. சில நிர்வாகிகள் பிரவினை மீட்டு அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
2011 இல் இருந்து ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளராக இருப்பதாகவும், அதிமுக கூட்டங்களுக்கு தனக்கு தகவல் கூட தெரிவிப்பதில்லை எனவும் பிரவீன் கூறினார். இதற்கிடையே கூட்டத்திற்கு வெளியே இருந்த நிர்வாகிகளை கே.ஏ செங்கோட்டையன் மீண்டும் உள்ளே வருமாறு அழைத்து அமர வைத்தார்.