தேமுதிகவை சமாதானப்படுத்த அதிமுக முயற்சி?

மாநிலங்களவை எம்.பி. பதவி விவகாரத்தில் தேமுதிகவை சமாதானப்படுத்த அதிமுக முயற்சித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என பிரேமலதா கூறி வந்த நிலையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக நாங்கள் கூறினோமா? யார் யாரோ சொல்வதை வைத்து கேள்வி எழுப்ப வேண்டாம். தேர்தல் அறிக்கையில் என்ன கூறினோமோ அதைப் பற்றி மட்டும் பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார். இதையடுத்து மறைந்த விஜயகாந்தின் எக்ஸ் தள பக்கத்தில், “சத்தியம் வெல்லும், நாளை நமதே..!” என பிரேமலதா விஜயகாந்த் பதிவிட்டு உடனே நீக்கினார்.
இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவி விவகாரத்தில் தேமுதிகவை சமாதானப்படுத்த அதிமுக முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் அதிமுகவின் மூத்த தலைவர்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் பொறுமை காக்கும்படி அதிமுக தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தேமுதிக நிர்வாகிகள் விளக்கம். ஜூலை மாதம் நல்ல செய்தி கிடைக்கும் என்று தேமுதிக தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது.