"பிரதமர் மோடியே அஞ்சி நடுங்கும் 2 விஷயங்கள் என்ன தெரியுமா?"
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல் , டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் நிறுவனங்கள் எண்ணெய் விலையை தினமும் நிர்மாணித்து வரும் நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெட்ரோல் , டீசல் விலை உயர்வடைந்துள்ளது. குறிப்பாக 100 ரூபாயை தாண்டி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட பெட்ரோல், டீசல் விலை தங்கத்திற்கே சவால் விடுகிறது.
குறிப்பாக விமானத்திற்கான எரிபொருளை விட 30% அதிகமாக இருக்கிறது பெட்ரோல் விலை. டெல்லியில் விமான எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.79, ஆனால் பெட்ரோல் விலையோ லிட்டருக்கு ரூ.105.84. இதை குறைக்க வேண்டிய மத்திய பாஜக அரசோ முந்தைய அரசின் மீது பழியைப் போட்டு அமைதி காக்கிறது. தடுப்பூசியை இலவசமாக பெற வேண்டுமென்றால் பெட்ரோலுக்கு அதிக வரியை மக்கள் கொடுத்து தான் தீர வேண்டுமென மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் ரமேஸ்வர் தெலி அரிய விளக்கம் கொடுக்கிறார்.
மக்களிடமே வரியை வாங்கி தடுப்பூசி செலுத்தினால் எப்படி அது இலவசமாகும் என்பதை அவர் மறந்துவிட்டார் போல. அனைத்தையும் கேட்டுக்கொண்டு நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பிரதமர் மோடியோ ஒன்றும் தெரியாதது போல் அமைதி காக்கிறார். இதனை கடுமையாக விமர்சித்து பேசியுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாசுதீன் ஒவைசி, "பிரதமர் மோடி இரண்டு விஷயங்கள் குறித்து வாயே திறக்க மாட்டார். ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு. இரண்டாவது இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு. இது இரண்டை பற்றி பேசுவதற்கும் பிரதமர் மோடி பயப்படுகிறார்” என்றார்.