'பிரதமர் மோடி போட்டோ போடுங்க'... முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கோரிக்கை!
மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பயன்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்திலும் ஆட்சியாளர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டு வந்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆட்சியாளர்களின் புகைப்படங்கள் அச்சிட படுவதில்லை. இந்த நிலையில், மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை போடுமாறு பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அவர், மோடியின் 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை பாஜக கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது பிரதமர் மோடியின் புகைப்படத்தில் பயன்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொள்கிறேன். அதில் அரசியல் செய்ய வேண்டாம். தமிழகத்திற்காக பிரதமர் மோடி பிரத்யேக திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் சுதாகர் ரெட்டி தலைமையில் பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால பொது வாழ்வை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.