"தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம்" - அதிமுக மீது அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டு!
'ஒரு நாள் - ஒரு வார்டு' திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சி 31ஆவது வார்டு அருணாச்சலம் நகரில் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை 6 மணிக்கு நடைப்பயிற்சியோடு சேர்த்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாக்கடை கால்வாய்கள் உள்ள அடைப்புகளைப் பார்வையிட்டு அவற்றை அகற்றவும் பல்வேறு இடங்களில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கரூர் நகராட்சியில் 11,575 தெரு விளக்குகள் உள்ளன.
இவற்றில் சேதமடைந்த 3,550 தெருவிளக்குகள் கடந்த 4 மாதங்களில் மாற்றப்பட்டுள்ளன. 100 மீட்டருக்கு ஒரு தெருவிளக்கு என்ற அடிப்படையில், கரூர் நகராட்சியில் 2,300 புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளன. பருவமழைக்காலத்தை எதிர்நோக்கும் வகையில், 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. அனல்மின் நிலையங்கள் மூலம் கடந்த ஆட்சியில் 58 சதவீத மின் உற்பத்தி செய்யப்பட்டது. தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக அனல்மின் நிலையங்கள் சரிவரப் பராமரிக்கப்படாமல் இருந்தது.
அனல்மின் நிலையங்கள் மூலம் 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும் கடந்த ஆட்சியில் 1,800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது மின் உற்பத்தியை 3,500 மெகாவாட்டாக உயர்த்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 70 சதவீத மின் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2006-11 திமுக ஆட்சியில் அனல்மின் உற்பத்தி 85 சதவீதமாக இருந்தது" என்றார்.