அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை!

 
ops

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 49 ஆண்டுகளைக் கடந்து வரும் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நாளை பொன் விழாவாக கொண்டாட கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். பொன் விழாவன்று எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பிக்குமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் கழகத்தினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

eps ops

எல்லா இடங்களிலும் கொடி கம்பங்களை அமைத்தும் ஏற்கனவே இருக்கும் கொடிக் கம்பங்களுக்கு புது வர்ணம் பூசியும் விழாக்கோலம் பூண்டு இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுகவின் பொன்விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொன்விழா தினத்தன்று ஆண்டு மலரை வெளியிட அவைத் தலைவரை அறிவிக்க வேண்டும் என்பதால்  அவைத் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும் சசிகலாவின் வருகையை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.