சசிகலாவின் மவுனம்.. யாருக்கும் அழைப்பு இல்லை..
அதிமுகவின் வெள்ளிவிழா ஆண்டு நாளை மறுதினம் 17. 10 .2018 அன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை 16ஆம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார் சசிகலா. அதன் பின்னர் மறுநாள் அதிமுக உருவான தினத்தில் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் மற்றும் ராமாபுரத்தில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லம் சென்று அஞ்சலி செலுத்துகிறார் சசிகலா.
இதனால் சசிகலா அதிமுகவுக்குள் அடியெடுத்து வைக்கிறார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், சசிகலாவோ இது குறித்து அறிக்கை எதுவும் வெளியிட வில்லை. தொண்டர்களுக்கும் அவர் அழைப்பு விடுக்கவில்லை.
இதுகுறித்து அதிமுக வின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி பரபரப்பு கருத்தை வெளியிட்டிருக்கிறார். ’’ எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் சந்தித்த உள்ளாட்சித் தேர்தலில் ஜீரணிக்க முடியாத தோல்வி ஏற்பட்டிருக்கிறது . எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்களை பயன்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தடை போட்டதால், எடப்பாடி பழனிச்சாமி படங்களை மட்டுமே முன்னிலைப் படுத்தியது தான் இந்த தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களைச் சொல்லித் வாக்கு கேட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் சாதி அரசியல் செய்ததாலும் இந்த படுதோல்வி ஏற்பட்டிருக்கிறது. ஒரு கொலைப்பழியும் எடப்பாடி பழனிச்சாமி இந்தப் படுதோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
இதனால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில் சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்க வர வேண்டும் என்று அதிமுக தொண்டர்களும் விரும்புவார்கள். ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் அதிமுகவில் உள்ள முக்கியமானவர்களுக்கும் சசிகலாவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை .தொண்டர்களுக்கும் அவர் அழைப்பு விடுக்கவில்லை.
கட்சியில் இருக்கும் முக்கிய பிரச்சனை எல்லாம் தீர்ந்து அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை. அந்த ஒற்றை தலைமையை சசிகலாவின் தலைமையாக இருக்க வேண்டும் என்றுதான் தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்புவதாக நான் நினைக்கிறேன். ஆனால் சசிகலா அது குறித்து எதுவும் பேசாமல் இருப்பது வேதனை அளிக்கிறது, வருத்தமளிக்கிறது. அவர் களத்தில் இறங்கி அதிமுகவை வழிநடத்தினால் ஒரு தலைமையாக மாறும். இல்லையேல் எல்லாமே தலைகீழாக மாறிவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.