"வன்னியர்கள் இடஒதுக்கீடு தீர்ப்பு... அரசு மேல்முறையீடு செய்ய கூடாது" - கருணாஸ் வலியுறுத்தல்!
கடந்த அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் எம்பிசிகளுக்கான் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது அப்போதே பெரும் விமர்சனத்துக்குள்ளானது. தேர்தல் கூட்டணி கணக்குக்காக வன்னியர்கள் ஓட்டுக்களுக்காக பிற சாதி மக்களை வஞ்சிக்கும் செயல் என விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக எம்பிசி பிரிவில் இருக்கும் சீர்மரபினர் உள்பட 68 சாதிகள் இந்த இடஒதுக்கீட்டால் பெரிதும் பாதிப்படைவார்கள் என போராட்டம் நடத்தினர். அதேபோல உயர் நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தத்தை ரத்துசெய்தது. அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்பு தான் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு, பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது என பிற சாதி மக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதே கருத்தை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் முன்வைத்துள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து வந்தவர் கருணாஸ். அதனால் தான் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் எனவும் சொல்லப்படுகிறது. மதுரையில் இன்று பேட்டியளித்த அவர், "முதலமைச்சர் பதவி ஆசை காரணமாக ஒரு சமூகத்தினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கி அவசர கோலத்தில் எடப்பாடி சட்டத்தை இயற்றினார். அதன் காரணமாக தான் தற்போது இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் கணக்கெடுப்பு இன்றி இட ஒதுக்கீடு வழங்குவது சரியான சமூகநீதியாக இருக்காது.
சமூக நீதி காக்க வேண்டும் என்றால் இந்த விவகாரத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணம் இந்த உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு தான். அதிமுக தோல்விக்கு காரணம் என்பது அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி சென்றது தான். நாங்கள் தேர்தல் நேரத்தில் 12 கோரிக்கைகளை வலியுறுத்தினோம் அதிமுக அரசு கண்டுகொள்ளாததால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தது. இதற்கு மேலும் அதிமுக குறித்து கருத்து சொல்ல பிடிக்கவில்லை” என்றார்.
"