"எதிர்க்கட்சியா இருந்தா ஒரு பேச்சு; இப்போ ஒரு பேச்சா” - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் கீழ் செயல்படும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் (MSME-TIPB) பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை ரூ.50 லட்சம் செலவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியிருக்கிறது.
இது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். ட்வீட் செய்துள்ள அவர், "காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எதிர்க் கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போலக் காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும், ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்குக் கையெழுத்து போடுவதையும் திமுக வாடிக்கையாக வைத்திருக்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும் , ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்திருக்கிறது. (2/5)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 31, 2021
அந்த வரிசையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பைத் திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது இப்பிரச்னையில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே, முதல்வராக இருக்கும் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இப்பிரச்னையில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே, முதலமைச்சராக இருக்கும் திரு. ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும். (4/5)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 31, 2021