’’தமிழ்நாட்டின் இரண்டாவது அண்ணா என அண்ணாமலையை வைகோ...’’
முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்கும் முற்றுகைப் போராட்டம் தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக பாஜக சார்பில் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, ’’முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்தன. முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது . கேரள அரசு எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழக அமைச்சர்கள் அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீரைத் திறந்து விடாமல் திருட்டு வேலை செய்து தண்ணீரை திறந்து வைத்துள்ளன’’என்றார்.
மேலும், ’’பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி தந்ததாக கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் ஸ்டாலின் ஆனால் அனுமதி கொடுக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உடனே பதிலடி கொடுக்கிறார் வடிவேலு காமெடி இருக்கிறது என்று கிண்டலடித்தார் அண்ணாமலை மேலும் முல்லைப் பெரியாறு அணையின் உரிமையைப் கேரள அரசிடம் மண்டியிட்டு ஸ்டாலின் சரணடைந்து விட்டார் அதனால் 5 மாவட்ட விவசாயிகளிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் இல்லை என்றால் ஸ்டாலின் அரசியல் சும்மா விட மாட்டோம்’’என்ற அண்ணாமலை, ’’ முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வைகோ பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும்’’ என்றார்.
ஸ்டாலின் அரசை சும்மா விடமாட்டோம் என்று சொன்னதற்கும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வைகோ பாஜக உடன் கைகோர்க்க வேண்டும் என்று சொன்னதற்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், ’’முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது என்று நிபுணர் குழு அறிக்கை கொடுத்த பின்னரும் கேரள அரசு புதிய அணை புதிய கரார் என்று குரலெழுப்பி இருக்கின்றது. அணையை உடைப்போம் என்றது.
இந்தக் கட்டத்தில்தான் நான் கட்சி மாச்சரியங்களை கடந்து ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாசு தலைமையில் ஐந்து மாவட்டங்களிலும் முல்லை பெரியாரை பாதுகாக்க வேண்டும் இல்லையேல் கோடிக்கணக்கான மக்களுக்கு குடிநீர் தண்ணீர் கிடைக்காது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனத்தை இழக்கும் என்ற பிரச்சாரத்தை முன்வைத்து மக்களை திரட்டினேன். கட்சிக் கொடி கட்டாமல் பொதுமக்களை விவசாயிகளை திருப்பினேன். விழிப்புணர்வு ஏற்பட்டது, நான்கு முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன். கேரளத்திற்கு செல்கின்ற 11 சாலைகளையும் இரண்டுமுறை தடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினேன் .அப்பொழுதுதான் கேரள முதல்வர் அச்சுதானந்தன், ‘ உங்களிடம் ஒரு வைகோ இருந்தால் எங்களிடம் 100 வைகோ இருக்கிறார்கள்’ என்று சொன்னார்.
இந்த பரபரப்பான காலகட்டத்தில் பாஜகவில் இப்போது வந்து சேர்ந்து இருக்கின்ற அண்ணாமலை முதலில் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு தமிழ் நாட்டை பற்றி ஒன்றும் தெரியாது வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பது நல்லது. தென்மாவட்டங்களில் முல்லைப்பெரியாறு என்றால் பென்னிகுயிக் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது நான்தான். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒன்றாகும். அணையை உடைக்கலாம் என்று தற்போது கேரள அரசு திட்டமிடுகிறது. அதனை எதிர்த்து தமிழக மக்கள் பொங்கி எழுவார்கள். இந்த பிரச்சினையை பற்றி அகரம் கூட தெரியாத அண்ணா மலைகள் என் பெயரை உச்சரிக்க எந்தத் தகுதியும் கிடையாது’’ என்று கடுமையாக தெரிவித்திருந்தார்.
வைகோவின் இந்த கடுமைக்கு தமிழக பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது. அண்ணாமலை இந்தியாவின் செகுவாரா தமிழ்நாட்டின் இரண்டாவது " அண்ணா"- நாளை வைகோ (சொல்லலாம்). கொள்கையை தூக்கி வீசி, தன்மானத்தை காற்றில் வீசி ஸ்டாலின் காலடியில் கிடக்கும் வைகோ -ஐயோ பாவம்’’என்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
’’முல்லைபெரியார் பிரச்சனையில் அண்ணாமலைக்கு அகரம்தெரியாது - இன்று-வைகோ. இலங்கை பிரச்சனையில் ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. கேட்டால் கொழும்பு - சிலோன் என்பார் - நேற்று வைகோ. ஸ்டாலினை போல ஒரு தலைவர் பிறக்கவில்லை அவர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் - இன்று வைகோ.’’ என்கிறார்.
ஒன்று தெரியாதவர் என்று சொன்ன வைகோ, இன்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று ஸ்டாலினை சொல்வதைப்போல, அகரம் தெரியாது என்று சொல்லும் வைகோ, நாளை தமிழ்நாட்டின் அண்ணா என சொல்லலாம் என்கிறார்.