இந்த தவறை செய்ததால் தான் தோல்வி அடைந்தோம் - கேப்டன் ரிஷப் பந்த்

 
rishab

பந்து வீச்சில் திட்டங்களை சரியாக செயல்படுத்த தவறியதால் தான் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. ருத்துராஜ் கெய்க்வாட் 23 ரன்களில் ஆட்டமிழக்க இஷான் கிஷான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அடுத்த வந்த ஸ்ரேயஸ் ஐயர் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.  கேப்டன் ரிஷப் பந்த் 29 ரன்களில் வெளியேறிய நிலையில், கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹர்த்திக் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது.  இதனையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் சிறப்பாக விளையாடியது. இறுதியாக தென் ஆப்ரிக்க அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் 64 ரன்களும், டூசன் 75 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ishan kishan

பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பந்துவீச்சில் கோட்டை விட்டதால் 211 என்ற இமாலய இலக்கையும் தென் ஆப்ரிக்க அணி எளிதில் எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்ததும் தோல்வி குறித்து கூறிய இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். 211 ரன்களை சேர்த்தது மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் பந்து வீச்சில் திட்டங்களை சரியாக செயல்படுத்த தவறிவிட்டோம். இதனாலயே போட்டி தென் ஆப்ரிக்க அணியின் வசம் சென்றுவிட்டது. தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஆடுகளம் எளிதாக இருந்தது. அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.