முதல் வெற்றியை ருசித்த சென்னை அணி.. சிக்ஸர் மழை பொழிந்த உத்தப்பா, ஷிவம் துபே..
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வென்றதன் மூலம் இந்தத் தொடரில் முதல் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்திருக்கிறது.
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற அழுத்தத்தில் களம் கண்டது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த அந்த அணியின் ஷிவம் துபே 46 பந்துகளில் 95 ரன்களை குவித்தார். அவருக்கு துணையாக இருந்த ராபின் உத்தப்பா 50 பந்துகளில் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி பவுண்டரி சிக்சர்கள் அடித்த மூன்றாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் அடித்தால் 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை குவித்தது.
ஒரு ஓவருக்கு சராசரியாக 10 . 5 ரன்கள் தேவை என்ற மிகக் கடினமான இலக்குடன் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் தொடக்க விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. பெங்களூரு அணியில் டூபிளிசிஸ் 8 ரன்களிலும், விராட்கோலி 1 ரன்னிலும், மேக்ஸ்வெல் 26 ரன்களிலும் என தொடக்க நிலையிலேயே ஆட்டமிழந்தனர். அடுத்து ஷபாஸ் அஹமது 41 ரன்களும், பிரபு தேசாய் 30 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 16 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அவர் களத்தில் இருந்த வரைக்கும் பெங்களூரு அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.
அவரது விக்கெட்டை பிராவோ கைப்பற்றியதும், பரபரப்பு முடிவுக்கு வந்து பெங்களூரு அணியின் தோல்வி உறுதியானது. அந்த அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 5வது ஆட்டத்தில் முதல் வெற்றியை ருசித்த சென்னையின் அணியின் ட்விட்டர் பக்கத்தில், விசில் போடு என குறிப்பிட்டு சென்னை அணியினர் கொண்டாடினர். இந்த ஆட்டத்தில் மடும் சென்னை அணி 17 சிக்ஸர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.