இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோதல்

 
RR vs RCB

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 38 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 39வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பாப் டுபிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

RR

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் அந்த அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் சஹால், அஸ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். 

RCB

பெங்களூரு அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் அந்த அணியில் கேப்டன் பாப் டுபிளேசிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இதேபோல் பந்துவீச்சில் ஹேசில்வுட், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். கடைசியாக விளையாடிய போட்டியில் பெங்களூரு அணி 69 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.