ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள்

 
IPL

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா-டெல்லி அணியும், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் - லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

15வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 18 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் தொடங்கும் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

KKRvsDC

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியை தவிரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. பேட்டிங்கை பொறுத்தவரையில், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ஆந்த்ரே ரஸ்ஸல் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

இதேபோல் டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 1 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள நிலையில், 2 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலுமே தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

RRvsLSG

இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2-ல் வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதேபோல் லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.