தோல்வியை தவிர்க்குமா இந்தியா ? - இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு
இந்தியாவிற்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 119 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பந்து 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகட்சமாக பேர்ஸ்டோ 106 ரன்கள் எடுத்தார். 132 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்துள்ளது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. சாக் கிராவ்லி 46 ரன்கள் சேர்த்து அவுட்டாகிய நிலையில், அடுத்து வந்த ஆல்லி போப் ரன் எதுவும் எடுக்காமலேயே வெளியேறினார். இந்நிலையில் அலெக்ஸ் லீஸ் 56 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இருவருமே அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, வெற்றி வாய்ப்பை இங்கிலாந்தின் வசம் கொண்டு வந்தனர். 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 76 ரன்களுடனும், பேர்ஸ்டோ 72 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 5வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 119 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதல் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியுள்ளது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி டிரா ஆன நிலையில், 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடர் சமனில் முடியும் என்பது குறிப்பிடதக்கது.