டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற ஆக்ரோஷமாக விளையாடுவோம் - கே.எல்.ராகுல்

 
kl rahul

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற இனி வரும் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடுவோம் என இந்திய பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். 

வங்கதேச நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 2க்கு 1 என்ற கணக்கில் வங்கதேச அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.  இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. 

ind vs ban

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 52.08 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடம் வகிக்கிறது. முதல் 3 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (75 சதவீதம் புள்ளி), தென்ஆப்பிரிக்கா (60 சதவீதம்), இலங்கை (53.33 சதவீதம்) ஆகிய அணிகள் உள்ளன. இங்கிலாந்து 44.44 சதவீதத்துடன் 5-வது இடத்தில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்றாக வேண்டும். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடந்த போட்டியின் போது காயம் ஏற்பட்டதால் அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே கே.எல்.ராகுல் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றை எட்டுவதற்கு நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். தற்போது எந்த நிலையில் இருக்கிறோம், இறுதி சுற்றை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். களத்தில் ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட பகுதிகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் இப்படி தான் விளையாட வேண்டும் என்று எந்த இலக்கும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் போட்டியில் முடிவு கிடைக்க துணிச்சலாகவும், ஆக்ரோஷமாகவும் விளையாட முயற்சிப்போம். இவ்வாறு கூறினார்.