உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்திய மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம்..
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதில், அஞ்சும் முட்கில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய மகளிர் குழுவான அஞ்சும் முட்கில், சாக்ஷி ஆஷி, சம்ரா சிப்ட் கவுர் அணி பங்கேற்றது. இந்த அணி 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. தரவரிசை சுற்றுக்கு நடைபெற்ற தகுதிச்சுற்றில் அஞ்சும் முட்கில் 586 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் தரவரிசை சுற்றில் 402.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஞ்சுல் முட்கில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். இந்த வெற்றி குறித்து அஞ்சும் முட்கில் கூறியதாவது, “டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எனக்கு பலவற்றை கற்றுக் கொடுத்தது. அங்கு கிடைத்த அனுபவம் எனக்கு இந்தப் போட்டியில் உதவியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு வழக்கமான பயிற்சிக்குத் திரும்ப நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. நம்பர் 1 வீராங்கனையாகி இருப்பது கூடுதல் அழுத்தத்தை தரும். முதல் முறையாக நான் நம்பர் ஒன் வீராங்கனையாகி இருக்கிறேன். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார். இதனிடையே, 50 மீ ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.