இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா

 
rahul dravid

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது வழிகாட்டுதலின் படி இந்திய அணி பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறது. இதனிடையே இந்திய அணி இவரது பயிற்சியின் கீழ் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இருந்தது. இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லமாட்டார் என கூறப்படுகிறது. 

இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் வருகிற 28-ந்தேதி துபாயில் நடைபெறும் லீக் போட்டியில் மோதுகிறது. ஆசிய கோப்பை தொடர் டி20 உலக கோப்பை தொடரின் முன்னோட்டமாக கருதப்படுவதால் இது இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.