இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நமீபியா - 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 
Namibia

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 

8-வது டி 20 உலக கோப்பை போட்டி இன்று முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.  இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா உள்ளிட்ட 8 அணிகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது சுற்றின் முதல் போட்டியில், இலங்கை அணி நமீபியாவை எதிர்கொண்டது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய நமிபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பிரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்னும், ஜே.ஜே.ஸ்மித் அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 31 ரன்னும் எடுத்தனர்.  இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி  தொடக்கம் முதலே தடுமாறியது.  இறுதியில் அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் ஆனது. இதன் மூலம் நமிபியா 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.