இந்தியாவின் 1000ஆவது ஒருநாள் போட்டி... "உலகின் முதல் அணி" எனும் பெருமை - "ஸ்பெஷல் வெற்றி" வசப்படுமா?
சமீபத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆண்டின் முதல் தொடரிலேயே மிக மோசமாக இந்திய அணி விளையாடியது. அணியில் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் இல்லாமையும் தவறான அணித்தேர்வாலும் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா. கோலி தலைமையிலான டெஸ்டில் கூட மிகச் சிறப்பாக விளையாடி போராடி தொற்றது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி வாஷ்அவுட்டானது.
இச்சூழலில் இந்தக் காயத்திற்கு மருந்திடும் வகையில் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தொடர் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இது இந்தியாவின் ஆயிரமாவது ஒருநாள் போட்டியாகும். இதுவரை எந்தவொரு சர்வதேச அணியும் ஆயிரம் ஒருநாள் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. அந்த வகையில் கிரிக்கெட் உலகில் ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் கலந்துகொள்ளும் முதல் அணி இந்தியா தான். இது இந்தியாவுக்கு மிகவும் ஸ்பெஷலான போட்டியாக பார்க்கப்படுகிறது.
மீண்டும் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியிருக்கிறார். அணியை அவர் வழிநடத்துகிறார். ஜடேஜா இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை. அஸ்வின், கேஎல் ராகுலுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ருதுராஜ், இஷான் கிஷான், தமிழக வீரர் ஷாருக்கான், தீபக் கூடா, ரவி பிஸ்னோய் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டனர். இச்சூழலில் தவான், ருதுராஜ், ஸ்ரேயாஷ் ஐயர், நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவருக்கு கொரோனா ஏற்பட்டதால் மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இச்சூழலில் ரோஹித் தன்னுடன் இணைந்து இஷான் கிஷான் தான் ஓபனிங் வீரராகக் களமிறங்குவார். அவரை விட்டால் யாரும் இல்லை. அதேபோல முன்னாள் கேப்டன் கோலி ரோஹித் தலைமையில் முதல் போட்டியில் ஒரு வீரராகப் பங்குபெறுகிறார். இதன் காரணமாகவே இந்தப் போட்டி மிக மிக ஸ்பெஷலான போட்டியாகவே அமைந்துள்ளது.